புதன், 29 பிப்ரவரி, 2012

தானமாக பெற்ற கல்லீரலை பாதுகாக்கும் புதிய இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




ஒருவரிடம் இருந்து தானமாக பெறப்படும் உடல் உறுப்புகளை குறிப்பிட்ட சில மணிநேரத்திற்குள் மற்றொருவர் உடலில் பொருத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல் நீண்ட நேரம் வைத்திருந்தால் அவை பயனற்று போய்விடும்.
எனவே இதனை தடுப்பதற்காக அவற்றை பத்திரமாக பாதுகாக்கும் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மனித உடலில் இருந்து தானம் பெறப்படும் கல்லீரலை(Liver) பாதுகாக்க அதிநவீன இயந்திரத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பொதுவாக தானமாக பெறப்படும் கல்லீரலை ஐஸ்கட்டியில் வைத்து சுமார் 12 மணி நேரம் வரை பாதுகாக்க முடியும். அதன் பின்னர் கல்லீரலில் உள்ள இரத்த நாளம் பாதிக்கப்படும், மேலும் அதன்மீது கொழுப்பும் படர்ந்து விடும். எனவே அது பயன்படாமல் செயல் இழந்து விடும்.
ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இயந்திரத்தின் மூலம் 24 மணி நேரம் வரை கல்லீரலை பாதுகாக்க முடியும். அதில் கல்லீரல் உடல் தட்பவெப்பநிலையில் வைத்து பாதுகாக்கப்படுகிறது.
அதற்கு தேவையான இரத்தம் ஆச்சிஜன் மற்றும் சத்து பொருட்கள் சப்ளை செய்யப்படுகின்றன. அந்த வகையில் அதிநவீன முறையில் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதற்கு மெட்ரா என பெயரிட்டுள்ளனர். தொடக்கத்தில் பன்றிகளின் கல்லீரல் இந்த எந்திரத்தில் வைத்து பாதுகாத்து வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது. அதேபோன்று மனிதர்களின் 13 கல்லீரல் பாதுகாக்கப்பட்டு மற்றவர்களுக்கு பொருத்தப்பட்டது. அதில் 6 கல்லீரல்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன.
எனவே இந்த இயந்திரம் தானம் பெற்ற கல்லீரலை பாதுகாப்பாக வைக்க உகந்தது. இதன்மூலம் விலைமதிக்க முடியாத பலரது உயிர் பாதுகாக்கப்படும் என ஆக்ஸ்போர்டு உடல் மாற்று சிகிச்சை மைய இயக்குனர் பீட்டர் பிரண்ட் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக